திங்கள், 15 பிப்ரவரி, 2016

பாக்யாவில் எனது ‘நேயம்’ - சிறுகதை



நேயம்
                                                                                                  -சிறுகதை






நேயம்!- 

(மணவை ஜேம்ஸ்)

                விடியாத அந்த வைகறைப் பொழுதில் சூளியாபட்டிக்குள் பால்காரர் மணியை அடித்தபடி நுழைந்தார். பால்காரர் மணியடித்தாலே மணி நான்கு என்று அர்த்தம்.
                                       
              வெயிலையும் பனியையும் வரவேற்கும் ஓலைக்குடிசையில் வசிக்கும் 
கதிரவனின் அப்பா, இராமசாமி அன்றாடங்காய்ச்சி. நீடித்துவந்த இருமலுக்கு கைவைத்தியமாய்ச் செய்த கஷாயங்கள் எடுபடாமல் போய் இறுதிச் சரணாகதியாய் அரசுமருத்துவமனைக்குச் சென்றபொழுதுதான் டி.பி. முற்றிவிட்டது தெரிந்தது.  இருமியபடியே  தன்மகன் கதிரவனை எழுப்பினார், கதிரவன் எழுந்தான்.
        
             தன் தங்கை பிறந்த பொழுதே தாய் இறந்துவிட ... தாயை முழுங்கியவள் என்ற பெயருடனே தங்கை கயல்விழி இப்பொழுது பிளஸ்டூ படிக்கிறாள்.  குடும்பத்தையே இவன்தான் காப்பாற்றவேண்டிய நிலையில் இருந்தான்.
                                               
              அரைமணி நேரத்திற்குள் பேண்ட் சட்டையை மாட்டிக் கொண்டு கதிரவன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு மணப்பாறைக்குப் புறப்பட்டான்.  இரண்டு மைல்தூரத்தையும் கால்மணி நேரத்தில் கடந்து, வேகமாகப் பேருந்து நிலையத்திற்குள் அவன் நுழைவதற்கும் அந்தப்பேருந்து உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.


                     பேருந்துக்குள் இருந்த தினசரிப் பேப்பர் பார்சலை எடுத்து சைக்கிளுக்குப்பின் வைத்துக்கொண்டு புறப்பட்டான்.  நூறு வீட்டிற்குப் பேப்பர் போட்டாக வேண்டும்.  
                      அவனின் முதலாளி ஒரு பேப்பருக்குக் கொடுக்கும் ஐம்பது பைசாவீதம் சராசரியாக ஐம்பது ரூபாய் கிடைக்கும்.  இதில் தினமும் பேப்பர் போடும் டாக்டர் வீட்டில் உள்ள ரோஜர் நாய்க்கு ஒரு பிஸ்கட் போட அவன் என்றும் தவறியதே இல்லை. காரணம் நாய் குரைக்கக்கூடாது என்பதற்காகவா? கடித்துவிடக்கூடாது என்பதற்காகவா? அப்படி ஒன்றும் அந்த நாய் எந்த தொந்தரவும் செய்வதில்லை.  கதிரவன் சிறியவனாக இருந்தபொழுது ஒரு நாய் அவன் வீட்டில் இருந்ததுதான் காரணம். இந்த ரோஜர் இவனைப் பார்த்தால் வாலை வேகமாக ஆட்டிக்கொண்டே ஒடிவரும்
                     எண்ண அலைகள் மனதில் மோதிக்கொண்டு இருந்தாலும் பேப்பரை ஒவ்வொரு வீடாகப் போட்டுக்கொண்டே சென்றான்.


                          கடைசியாகவுள்ள டாக்டர் வீட்டிற்குவர இவனைப் பார்த்ததும் ரோஜர் வேகமாக ஓடிவந்தது.   பேப்பரைப் போட்டுவிட்டு சட்டைப்பையில் வைத்திருந்த அந்தப் பிஸ்கட்டை எடுத்து நீட்டினான்.  அவன் கையிலிருந்து பிஸ்கட்டை வாயால் கவ்விக்கொண்டு  வாலை வேகவேகமாக ஆட்டிக்கொண்டே தின்றது.
                       “பேப்பரை வீசி எறியாதே... காத்துல பறந்து போகுது... எல்லாத்துக்கும் போட்ட பிறகு கடைசியா லேட்டாத்தான் போடுறாய்... எத்தன தடவ சொன்னாலும் ஒனக்கு புத்தியே வரமாட்டேங்கிது... என்றார் டாக்டர்.
          “சாரி...சார்! ஒங்க வீடு கடைசியாகத்தான் இருக்கு... ரயிலுக்கு நேரமாயிடுச்சு...கோவிச்சுக்காதிங்க...! மணி எத்தனைங்க?
                         “ம்...ஏழத்தாண்டப் போவுது”  கேட்டவுடன் கதிரவன் வேகமாக மிதிவண்டியைத் திருப்பிக்கொண் டு சென்றான். பேப்பரை எடுத்து வீட்டிற்குள் நுழைந்த பொழுது ரோஜர்’ உள்ளே  நுழைந்ததைப்
பார்க்காமல் கதவை ஓங்கிச் சாத்த, வால் கதவில் சிக்கிக்கொள்ள வீல் என்று கத்தியபடி டாக்டரைக்  கடித்துவிட்டது.
          சுதாரித்துக்கொண்டு உடனேயே கதவைத் திறக்க, நாயின் வாலில் இருந்து இரத்தம் வடிந்தது.  டாக்டர் காலைப் பார்த்தார், நாயின் பல் பதிந்த இடத்தில் இரத்தம் கசிந்தது.  முறையாக நாய்க்கெல்லாம் ஊசி போட்டு இருந்ததால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லையென்றாலும்... தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, நாயின் காயத்திற்கும் மருந்திட்டார்.  கண்களில் நீர் ஒழுக ரோஜர்அவர் காலை நக்கிக்கொண்டிருந்த்து.  அதன் பிறகு அது எதையும் சாப்பிடவேயில்லை.
                          

                 திரவன் வேகமாகப் புகைவண்டியில் ஏறி அமர்ந்தான்.  பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ் படிப்பு இந்த ஆண்டுடன் முடிந்துவிடும்.  இருபது வயதுடைய  கருப்புத் தேக்குமரம் போன்ற வாட்டசாட்டமான உடல்வாகு.

          திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்த இலவச குளியலறையில் குளித்தான்.  
          கதிரவன் கல்லூரிப் பேருந்தைப் பிடித்து கல்லூரிக்குச் சென்றான்.  கல்லூரியில் அவனுக்கு நல்லபெயர் இருந்த்து.  மாலை கல்லூரி முடிந்ததும் மலைக்கோட்டை வாசலுக்கருகில் வந்தான்.  அங்கு இருந்த முதலாளியிடம் வழக்கமாக விற்பனைக்காக வாங்கும் டி.வி.கவர், ரிமோட்கவர், கர்ச்சிப்களைப் பெற்றுக்கொண்டு கடைவீதியில் நின்றுகொண்டு கூவிக்கூவி விற்க முனைந்தான். 


அன்றைய தினம் விற்பனையைப் பொறுத்து அதிக பட்சமாக கமிஷன் நூறு ரூபாய் வரை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இரவு ஒன்பது மணிவரை விற்றுவிட்டு அன்றைக்கு கிடைத்த நூறு ரூபாயை வாங்கிக்
கொண்டு அடுத்த அரைமணிநேரத்தில் இரயிலைப்பிடித்தான்; வண்டியில் உட்கார்ந்ததும் சிறிது நேரத்திலேயே தூங்கிப் போனான்.
     மணப்பாறை வந்தவுடன் யாரோ எழுப்பிவிட எழுந்து சைக்கிளை எடுத்து ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.  தனது தங்கை சாப்பாடு போடும் பொழுது இரவு மணி பதினொன்றை நெருங்குவது வழக்கமான ஒன்றுதான். 
     “ராசா!  படிக்கிற வயசில...ஒனக்குத்தான் எம்பூட்டு செரமம்!
அப்பா நெகிழ்ந்து கேட்டார்.
     “எங்களுக்காக நீ படாத செரமமா...? அதெல்லாம் ஒன்னுமில்லப்பா... அப்பாவிடம் எழுபது ரூபாயைக் கொடுத்தான்.  படுத்தவன் உடனே  உறங்கிப்போனான்.
      
                           டுத்த நாளும் வழக்கம்போல்...!  

            எதை மறந்தாலும் பிஸ்கட்டை மட்டும்  எடுத்துவைக்க    மறக்கமாட்டான்.  கதிரவன் பேப்பர் போட்டுக்கொண்டு கடைசியாக டாக்டர் வீட்டிற்கு வந்த பொழுது...
டாக்டர் காரில் பூங்காவிற்குச் சென்று வாக்கிங் போய்விட்டு காரை வேகமாக ஓட்டிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.  எங்கிருந்துதான்

                                                                  

வந்ததோ ரோஜர் கார்முன் வேகமாகப் பாய்ந்தது.  டயரில் சிக்கி உடல் நசுங்கி அடுத்த நொடியில் துடிதுடித்து கதிரவன் கண்முன்னே இறந்தது.

          காரில் இருந்து இறங்கிய டாக்டர்..., ‘ரோஜர் இறந்துவிட்டதைப் பார்த்தார்.
         “நேத்து என்னக் கடிச்சதில இருந்து எது கொடுத்தாலும்...எதுவுமே சாப்பிடல... தினந்தோறும் நீயும் பிஸ்கட்டெல்லாம் போடுவாய்...
ஆமாங்க டாக்டர் இதுமாதரி நாய இப்போதைக்கு வளர்க்க வசதியில்ல... என்னமோ தெரியல இந்த ரோஜர்மேல அப்படி ஒரு பிரியம்”  இப்பொழுது கதிரவன் கண்கள் குளமாயின. 
          “இப்படி பண்ணிடுச்சே! தன்னந்தனியா இருந்த எனக்குத் துணையா பிள்ள மாதிரி இருந்திச்சு...”  டாக்டரும் கண்கலங்கி விம்மித் தேம்பினார்.

     “நாய் நன்றியுடையது... விசுவாசமா இருக்குமுன்னு கேள்விப்பட்டிருக்கேன்....!  ஆனா...இப்பத்தான் அத நேர்ல..”  கதிரவனால் அதற்குமேல் பேச முடியவில்லை.
     “முனிசிபாலிட்டிக்குப் போன் பண்ணி நாயைத் தூக்கிட்டு போய் ஆகவேண்டியத பார்க்கச் சொல்லவேண்டியதுதான் என்றார் டாக்டர்.
     “வேண்டாங்க டாக்டர்... எ சைக்கிள்ல வச்சு எடுத்திட்டு போயி நானே இதப் புதைச்சிடுறேன்...
                                       


     “சரிப்பா... இந்தா இந்த நூறு ரூபாய வச்சுக்க டாக்டர் மணிப்பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து நீட்டினார்.
     “வேண்டாம்....சார்...!  கதிரவன் பணத்தை வாங்க மறுத்து, நாயைத் தூக்கக் குனிந்தான், சட்டையிலிருந்த பிஸ்கட் கீழே விழுந்தது. 






(‘ஆவி டாக்கீஸ்’ நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது.)


 -மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.





வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! -3


பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 3



பிழையான சொல் ‘சிவப்பு வண்ணத்திலும்...

     பிழை திருத்தம் ‘பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



1.  எனக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள்.



     ‘பலஎன்பது அஃறிணைப் பன்மை.  பலர் என்பதே உயர்திணைப் பன்மை.

எனக்கு நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.


 2.  எங்கள் பள்ளி மாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் உள்ளது.











     அருகு மை – எனப் பிரித்தால் அருகில் இல்லாமை என எதிர்மறைப் பொருள் தரும்.

எங்கள் பள்ளி மாரியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது.

3.  பறவைகள் வானில் பறக்கிறது.



     பறவைகள் – அஃறிணைப் பன்மை.  பறக்கின்றன  என்று அஃறிணைப் பன்மை வினையில்தான் முடிய வேண்டும்.

பறவைகள் வானில் பறக்கின்றன.

4.  நாளைக்குப் பள்ளிகள் இயங்காது.



இயங்காது – அஃறிணை ஒருமை வினை முடிவு.  பள்ளிகள் – அஃறிணைப் பன்மை.  எனவே வினை முடிவும் பன்மையிலேயே இருக்க வேண்டும்.

நாளைக்குப் பள்ளிகள் இயங்கா.

5.  சின்னத்திரையில் நாடகம் பார்த்தேன்.


                                                                           
     சிறிய பெரிய என்னும் சொற்களுடன் பிற சொல் இணையும்போது வல்லினம் மிகாது.  சிறியதிரை, பெரியதிரை -  சிறிய என்பதன் திரிபு சின்ன என்பது.  எனவே சின்னதிரை என்பதே சரியானது.

சின்னதிரையில் நாடகம் பார்த்தேன்.

6.  நிதியமைச்சர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் .



     மாண்புமிகு என்னும் அடைமொழி ஒருவர் வகிக்கும் மேலான பதவி கருதி பதவிப் பெயரோடு ஒட்டி வருவதாகும்.  பதவி போனால் அடைமொழியும் போய்விடும். 

மாண்புமிகு நிதியமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம்.

7.  இன்று மாலை சரியாக ஏழு மணியளவில் விழா நடைபெறும்.



     சரியாக என்று சொல்லியபின் ‘அளவில்என்று சொல்வதன் பொருள் சரியில்லை.

     சரியாக ஏழு மணிக்கு விழா நடைபெறும்.

8.  பஞ்ச பாண்டவர்களில் பீமனே உடல் வலிமை வாய்ந்தவன்.



     பாண்டவர்களுள் ஒருவனைப் பிரித்துக் காட்டுவதற்கு ‘உள் விகுதியைப் பயன்படுத்த வேண்டும்.

பஞ்ச பாண்டவர்களுள் பீமனே உடல் வலிமை வாய்ந்தவன்.

9.  பத்து நாடுகளுக்கு மேல் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டன.


     நாடுகள் என்ற எழுவாயை முதலில் இட்டு எண்ணிக்கையை அடுத்ததாகக் குறிப்பிட வேண்டும். 

நாடுகள் பத்திற்கு மேல் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டன.

10.  முகர்ந்து பார்க்கலாமா?



     ‘முகர்ந்து என்று தமிழில் இல்லை.  நுகர்ந்து – நுகர்ச்சி – அனுபவம் அனுபவித்து என்ற பொருள் வருவதால்

நுகர்ந்து பார்க்கலாமா?

                                                (தொடரும்...

நன்றி: தமிழாசிரியர் முழக்கம்.

 -மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.











    
    
















    
    



















Related Posts Plugin for WordPress, Blogger...